×

சேலம் பெரியார் பல்கலைக்கழக தங்கவேலை நீக்க கோரி பேராசிரியர்கள் போராட்டம்: பணி நீட்டிப்பிற்கு கடிதம் வழங்கியதாக குற்றச்சாட்டு

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட தங்கவேலை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி பேராசிரியர்கள், பணியாளர்கள் இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது மேற்கொண்ட பணி நியமனம் மற்றும் பொருட்கள் கொள்முதலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அரசின் உத்தரவின் பேரில், பழனிசாமி ஐஏஎஸ் தலைமையிலான இருநபர் குழுவினர் விசாரணை நடத்தினர். அதில், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், கணினி அறிவியல் துறை தலைவரும், பொறுப்பு பதிவாளருமான தங்கவேல், தமிழ்துறை தலைவர் பெரியசாமி ஆகிய 3 பேரும் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது உறுதியானது.

இதையடுத்து பிப்ரவரி மாதத்தோடு பணி ஓய்வு பெறவுள்ள பதிவாளர் (பொ) தங்கவேலை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய துணைவேந்தர் ஜெகநாதனுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியது. ஆனால், பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக அவருக்கு 12 நாள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது. அந்த விடுமுறை முடிந்து கடந்த 3 நாட்களுக்கு முன் மீண்டும் கணினி அறிவியல் துறைத்தலைவர் பணியில் சேர்ந்துள்ளார்.

முன்னதாக அவர் வகித்த பதிவாளர் பொறுப்பு விஸ்வநாதன் மூர்த்தி என்பவருக்கு வழங்கப்பட்டது. அதன்பின்னரும் அவர் மீது அரசின் உத்தரவுபடி சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படாமல், முறைகேட்டிற்கான ஆதாரத்தை துணைவேந்தர் ஜெகநாதன், உயர்கல்வித்துறையிடம் கேட்டார். அதனடிப்படையில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்களை துணைவேந்தருக்கு உயர்கல்வித்துறை அனுப்பி வைத்தது. மேலும், சென்னை உயர்நீதிமன்றமும் முறைகேட்டில் ஈடுபட்ட தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனத்தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவிற்கு செவிசாய்க்காமல் துணைவேந்தர் ஜெகநாதன் இருக்கிறார். அவர், தங்கவேலை காப்பாற்ற மேலும் ஒரு மாத காலத்திற்கு (மார்ச் 31 வரை) பணி நீட்டிப்பு வழங்க கடிதம் வழங்கியிருப்பதாக இன்று காலை தகவல் வெளியானது. இதனை அறிந்த பெரியார் பல்கலைக்கழக பணியாளர் சங்கத்தினரும், ஆசிரியர் சங்கத்தினர் இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பணியாளர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல், ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் பிரேம்குமார் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள், பணி ஓய்வு பெறும் பதிவாளர் தங்கவேலை உடனடியாக பணி நீக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அவரை காப்பாற்றும் நோக்கில் செயல்படும் துணைவேந்தர் ஜெகநாதனை கண்டித்தும் கோஷமிட்டனர்.

The post சேலம் பெரியார் பல்கலைக்கழக தங்கவேலை நீக்க கோரி பேராசிரியர்கள் போராட்டம்: பணி நீட்டிப்பிற்கு கடிதம் வழங்கியதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Salem ,Thangavela ,AIADMK ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்...